மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்க முடியும்..

Started by Administrator, May 01, 2024, 03:24 PM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

Administrator

ஒரு ஊரில் ஒரு சிற்பி இருந்தான். ஒரு நாள் அவனிடம் அந்த ஊர் மக்கள், ' ஒரு கோயில் கட்டுகிறோம். சாமி சிலை ஒன்றை செதுக்கி தாருங்கள்' என்று கேட்டனர். சிற்பி சரி என்று அருகில் இருந்த மலையில் இரண்டு கற்களை கொண்டு வந்தான். ஒரு கல்லை சாமி சிலையாகவும், இன்னொரு கல்லை வாசலில் படி கல்லாகவும் செய்து முடித்தான். கோயில் கட்டி முடிவடைந்தது.

ஒரு நள்ளிரவில் யாரோ அழுவது கேட்ட சாமிக்கல், ' யாரது அழுவது' என கேட்டது. உடனே வாசலில் இருந்த படிக்கல், ' நான் தான் அழுகிறேன்' என்றது. சாமிக்கல் அதற்கான காரணத்தை கேக்க, அதற்கு படிக்கல் கூறியது, ' நாம் இருவரும் ஒரே மலையில் தான் பிறந்தோம்..ஒரே சிற்பி தான் நம் இருவரையும் செத்துக்கினான். ஆனால், உன்னை மட்டும் சாமி சிலையாகி செய்து கற்ப கிரகத்தில் வைத்துள்ளான். என்னை படிக்கல்லாக வெளியே வைத்துவிட்டான். உன்னை அனைவரும் கை எடுத்து வணங்குகின்றனர். ஆனால், என்னை ஏறி மிதிக்கின்றனர். இது என்ன அநியாயம்..?' என்று புலம்பியது படிக்கல்.

அதற்கு உள்ளே இருந்த சாமிக்கல் ' உன் நிலைக்கு நீயே தான் காரணம். உன்னை சிற்பி செதுக்க உளியை உன் மீது அடித்தார். நீ வலியை தாங்க முடியாமல் கதறினாய். உன் மீது எங்கு உளி பட்டாலும் உன்னால் அந்த வலியை தாங்க முடியவில்லை. நீ சிற்பிக்கு ஒத்துழைக்கவில்லை. ஆகையால் சலிப்படைந்த சிற்பி, உன்னை படிக்கல்லாக வெளியே வைத்தான். என் மீது உளியை வைத்து அடிக்கும் போது அந்த வலியை நான் பொருத்துக் கொண்டேன்..தலை, கை, கால் என எல்லா பகுதியை அவன் செதுக்கும் போதும் நான் வலியை பொருத்துக்கொண்டேன். ஆகையால் நான் ஒரு சிலையாக உருப்பெற்றேன். நான் வலியை தாங்கியதால் என்னை அனைவரும் வணங்குகின்றனர். நீ வலியை தாங்காததால், உன்னை மிதிக்கின்றனர்' என்று கூறிய உடன் தான் படிக்கல்லிற்கு தன் தவறு புரிந்தது.

உண்மை தானே...நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களையும் கஷ்டங்களையும் யார் பொருத்துக்கொள்கிறார்களோ, அவர்களே எதிர்காலத்தில் நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்க முடியும்..